ஊராட்சிகளில் பயன்பாடின்றி வீணாகும் குப்பைத் தொட்டிகள்
கமுதி:கமுதி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் குப்பைத்தொட்டிகள் சேதமடைந்து பயன்பாடின்றி உள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.கமுதி ஒன்றியத்தில் 53 ஊராட்சிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் கண்ட இடங்களில் குப்பை கொட்டாமல் தடுப்பதற்காக இரும்பு குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டது.தற்போது குப்பைத்தொட்டிகள் பல இடங்களில் சேதமடைந்து பயன்பாடின்றி உள்ளது. இதனால் மக்கள் வேறுவழியின்றி குப்பையை ஆங்காங்கே கொட்டி வருகின்றனர். காற்றில் இவை பறக்கிறது.கமுதி அருகே பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள குப்பைத்தொட்டி சேதமடைந்துள்ளதால் குப்பை ஆங்காங்கே பரவி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.எனவே கமுதி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் குப்பைத்தொட்டிகள் பராமரிக்கப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.