| ADDED : நவ 14, 2025 01:40 AM
ராமநாதபுரம்: இரிடியம் மோசடி வழக்கில் கைதான இருவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். நேற்று ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர். தமிழகம் முழுதும் இரிடியத்தில் ரூ.ஒரு லட்சம் முதலீடு செய்தால் ரூ. ஒரு கோடி தரப்படும் எனக்கூறி பலர் மோசடியில் ஈடுபட்டனர். இதற்கு ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தியதால் அவ்வங்கி அதிகாரிகள் சி.பி.சி.ஐ.டி.,யில் புகார் அளித்தனர். பல்வேறு மாவட்டங்களில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் 30க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் வைகைநகரைச் சேர்ந்த முன்னாள் தாசில்தார் ஜெயக்குமார் 67, புகாரையடுத்து இம்மாவட்டத்தில் மட்டும் ரூ.பல கோடி மோசடி நடந்தது தெரிய வந்தது. சேலம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இரிடியம் மோசடி வழக்கில் கரூர் வடக்கு காந்தி கிராமத்தை சேர்ந்த சிற்றரசு ராயன் 64, மதுரை, மெய்யனுாத்தப்பட்டி அன்னக்கொடி 62, ஆகியோரை கைது செய்தனர். சிற்றரசு ராயன் சேலம் சிறையிலும், அன்னக்கொடி மதுரை சிறையிலும் அடைக்கப்பட்டனர். நேற்று முன் தினம் இருவரும் ராமநாத புரம் குற்றவியல் நடுவர் (எண்: 2) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி., போலீசார் இருவரையும் 2 நாட்கள் (நவ.,12,13) காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்றனர். அதன்படி விசாரணை முடிந்து நேற்று மாலை 5:00 மணிக்கு அன்னக்கொடி, சிற்றரசுராயனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி நிலவேஸ்வரன் உத்தரவின்படி பின் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இரிடியம் மோசடி தொடர்பாக முக்கிய தகவல்களை அவர்கள் கூறியுள்ளனர். அதன்படி அடுத்தகட்ட விசாரணையை போலீசார் தீவிரப்படுத்த உள்ளனர்.