விடுபட்ட வாக்காளர் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு
திருவாடானை: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிவடைந்த நிலையில் தகுதியுள்ள வாக்காளர்களாக இருந்தும் அவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தால் பட்டியலில் மீண்டும் சேர வாய்ப்பு உள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். திருவாடானை சட்டசபை தொகுதியில் ஓட்டுச்சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நவ.,4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்தது. ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவம் வினியோகித்தனர். பொதுமக்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட படிவம் திரும்ப பெறும் பணி நிறைவடைந்தது. இந்நிலையில் பொதுமக்களிடம் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களை தாசில்தார் அலுவலகத்தில் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் இணையதளத்தில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். திருவாடானை தாசில்தார் ஆண்டி கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியில் இறந்தவர்கள், இரட்டை பதிவு வாக்காளர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்து சென்றவர்கள், படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிக்காத வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட உள்ளது. டிச., 16ம் தேதி வெளியாகும் வரைவு பட்டியலில் நீக்கப்பட்டவர்களின் பெயர் இடம் பெறாது. தகுதியுள்ள வாக்காளர்களாக இருந்து தீவிர திருத்தத்தின் போது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தால் வாக்காளர் பதிவு அலுவலரிடம் மேல்முறையீடு செய்து பட்டியலில் மீண்டும் சேர வழி உள்ளது என்றார்.