சென்னை--ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை
ராமநாதபுரம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். நடப்பு ஆண்டு அக்.,20ல் தீபாவளி வரவுள்ள நிலையில் தற்போது பெரும்பாலான ரயில்களில் டிக்கெட்கள் இல்லை. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக 11 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை தெற்கு ரயில்வே ஆக.,26 வழங்கியது. அதில் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இடம் பெறாதது ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. பயணிகள் கூறியதாவது: சென்னையில் இருந்து அக்.,17, 18 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரம் புறப்படும் அனைத்து ரயில்களும் நிரம்பிவிட்டன. சிவகங்கை, ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வெளியூர்களில் பணிபுரிகின்றனர். அவர்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் தான் சொந்த ஊருக்கு வந்து செல்வர். ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்காததால் அவர்கள் கூடுதல் கட்டணம் கொடுத்து, சிரமத்துடன் பஸ்களில் வந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும், என்றனர்.