ரூ.1.50 லட்சம் கடல் அட்டை பறிமுதல்; இலங்கைக்கு கடத்த முயன்றவர் கைது
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டையை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.அரிய வகை கடல்வாழ் உயிரினமான கடல் அட்டையை பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் ராமேஸ்வரம், பாம்பன் ,மண்டபம் பகுதியில் கடல் அட்டையை பிடித்து மறைவான இடத்தில் பதப்படுத்தி மருத்துவ பயன்பாட்டிற்கென இலங்கைக்கு கடத்திச் செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை மண்டபம் தனிப்பிரிவு போலீசார் மரைக்காயர்பட்டினம் ரயில்வே கேட் அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.சந்தேகத்திற்குரிய ஆட்டோவை மடக்கி சோதனையிட்டதில் அதில் 150 கிலோ கடல் அட்டை இருந்தது. இதனை கடத்தி வந்த ஆட்டோ டிரைவர் சக்தி 22, என்பவரை கைது செய்தனர். இந்த கடல் அட்டையை மறைவான இடத்தில் பதப்படுத்தி கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டு இருந்தார். இதன் மதிப்பு ரூ. 1.50 லட்சம். கைதான சக்திவேல், ஆட்டோ மற்றும் கடல் அட்டையை வனத்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர். சக்திவேல் மீது வனத்துறையினர் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.