தனுஷ்கோடி தீடையில் கிடந்த ரூ.2 லட்சம் பீடி இலை பறிமுதல்
ராமேஸ்வரம்:தனுஷ்கோடி மணல் தீடையில் ஒதுங்கிய ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இவற்றை இலங்கைக்கு கடத்தல்காரர்கள் கடத்திச் செல்ல இருந்தனர்.தனுஷ்கோடி 5ம் மணல் தீடை வரை ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை வீரர்கள் ஹோவர்கிராப்ட் கப்பலில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது 2ம் மணல் தீடை ஓரத்தில் பீடி இலைகள் சிதறிக் கிடந்தது. இதனை சேகரித்து மண்டபம் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதன் மதிப்பு ரூ. 2லட்சம்.ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் கடத்தல்காரர்கள் இலங்கைக்கு கடத்திச் சென்றபோது இந்திய பாதுகாப்பு படை ரோந்து கப்பலை கண்டதும் இதன் பார்சலை கடலில் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். பீடி இலைகள் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.