| ADDED : ஜன 13, 2024 04:29 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட புதிய எஸ்.பி., யாக நேற்று மாலை பொறுப்பேற்ற சந்தீஸ் எஸ்.பி., மாவட்டத்தில் தங்கம், கஞ்சா கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுள்ள சந்தீஸ் ஆந்திர மாநிலம் சித்துார் பகுதியை சேர்ந்தவர். பி.டெக்., மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். 2018 ஐ.பி.எஸ்., வெற்றி பெற்று துாத்துக்குடியில் ஏ.எஸ்.பி.,யாகவும், கோவை வடக்கு பகுதி துணை கமிஷனராகவும் பணிபுரிந்துள்ளார். அவர் கூறியதாவது:ராமநாதபுரம் மாவட்டம் பல்வேறு சிறப்புகள் மிகுந்தது. இங்கு பணிபுரிய எனக்கு வாய்ப்பு கிடைத்தற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மாவட்டத்தில் மூன்று முக்கிய பிரச்னைகள் உள்ளது. தங்கம், கஞ்சா கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.ஜாதி ரீதியாக ஏற்படும் மோதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு தேவர் குருபூஜை, இம்மானுவேல் சேகரன் குருபூஜை அமைதியாக நடக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் முக்கியத்துவம் தரப்படும் என்றார்.