இலங்கை போலீஸ்காரர் வழக்கு செப்.16 க்கு ஒத்திவைப்பு
ராமநாதபுரம்: தமிழகம் தப்பி வந்த இலங்கை போலீஸ்காரர் மீதான வழக்கை செப்.,16க்கு ஒத்தி வைத்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கை கொழும்பு புறநகர் பகுதியான சபுகஸ்கந்த பகுதியில் உள்ள மரக்கடையில் இருந்து 2020-ல் இலங்கை போலீசார் 23 கிலோ ஹெராயின் போதைப் பொருளை கைப்பற்றினர். இலங்கை துறைமுகம் போலீஸ் ஸ்டேஷன் போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாரா 32, போலீசார் கைப்பற்றி வைத்திருந்த போதைப்பொருளை திருடி தனது சகோதரர் மூலம் கொடுத்திருக்கலாம் என இலங்கை போலீசார் சந்தேகித்தனர். இதனால் பிரதீப் குமார் பண்டாராவை அந்நாட்டு போலீசார் விசாரிக்க முடிவு செய்தனர். இதையறிந்தவர் தமிழகத்திற்கு தப்பி வந்தார். அவரை மண்டபம் கடலோர காவல் படை போலீசார் கைது செய்து சென்னை பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். தற்போது வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சிறையில் இருந்த பிரதீப் குமார் பண்டாரா ஜாமின் பெற்று திருச்சி முகாமிற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் வழக்கானது ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி மெகபூப் அலிகான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட இலங்கை போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாரா ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணையை செப்.,16க்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.