கிடப்பில் அளுந்திக்கோட்டை நடுநிலைப்பள்ளி புதிய கட்டடம் மாணவர்கள் சிரமம்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே அளுந்திக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்டப்பட்டும், வகுப்பறை கட்டடம் மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாததால் பள்ளி மாணவர்கள் இட நெருக்கடியில் சிரமத்தை சந்திக்கின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம் அளுதிக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது.இங்கு சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப் பள்ளி வகுப்பறை கட்டடம் பல ஆண்டுகளாக சேதமடைந்த ஓட்டு கொட்டகையில் செயல்பட்டு வந்ததால் மழைக்காலங்களில் மாணவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து ஓட்டு கொட்டகையில் இருந்து அருகில் இருந்த கட்டடத்திற்கு பள்ளி மாணவர்கள் மாற்றப்பட்டதுடன் புதிய வகுப்பறை கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகள் துவங்கின.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய கட்டுமானப் பணி 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் மின் இணைப்பு உள்ளிட்ட இறுதி கட்டப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் ஓராண்டாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் தொடர்ந்து குறுகலான கட்டடத்தில் இட நெருக்கடியில் சிரமம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் கிடப்பில் போடப்பட்டுள்ள வகுப்பறை கட்டடத்தை விரைந்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தினர்.