இன்றும், நாளையும் ஆசிரியர் தகுதித்தேர்வு: கால தாமதமாக வந்தால் அனுமதியில்லை
ராமநாதபுரம்: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.,15) தாள்-1 ஏழு மையங்களிலும், நாளை (நவ.16) 23 மையங்களில் தாள்-2 தேர்வுகள் நடைபெறவுள்ளது. தேர்வுகளை எழுதவுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு நாளன்று காலை 8:30 மணிக்கு சம்பந்தப்பட்ட தேர்வு மையத்திற்கு வர வேண்டும். கருப்பு மை கொண்ட பந்துமுனை பேனா, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட நுழைவுச்சீட்டு, அடையாளச் சான்றுகளுக்கு ஆதாரமாக கடவுச்சீட்டு, ஆதார், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு இவற்றில் ஏதாவது ஒன்றின் அசல் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டில் புகைப்படம் தெளிவாக இல்லை எனில் மூன்று பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோக்களை கொண்டு வந்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் 8:30 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். காலை 9:30 மணிக்கு தேர்வு மையத்தின் நுழைவு வாயில் பூட்டப்படும். அதன் பின்னர் வரும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித் துள்ளார்.