இலவச வீட்டுமனை பட்டா விபரம் கணினியில் பதிவேற்ற வலியுறுத்தல்
ராமநாதபுரம்: மேலபார்த்திபனுார் தெற்குத்தெரு காலனியில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா விபரங்களை கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். பரமக்குடி தாலுகா மேலபார்த்திபனுாரைச் சேர்ந்த பொதுமக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் மேலபார்த்திபனுார் குரூப் தெற்கு காலனியில் 1998ல் 72 பேருக்கு இலவச வீட்டுமனை ஒப்படை ஆணை வழங்கப் பட்டது. சிலருக்கு காலனி வீடு கட்டி கொடுத்துள்ளனர். இந்த ஆவணங்களின் விபரம் கணினியில் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை. பதிவு செய்துள்ளதில் சிலரது பெயர்கள் திருத்தம், நீக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. எனவே தெற்கு தெரு கிராம மக்கள் நலன் கருதி கணினி திருத்தம் செய்து விடுபட்டவர்களை பதிவேற்றம் செய்ய கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.