உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் மீதான வழக்கில் சாட்சிகள் விசாரணை

 பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் மீதான வழக்கில் சாட்சிகள் விசாரணை

ராமநாதபுரம்: ராணுவ ரகசிங்களை திருட பயங்கரவாதி களுக்கு உதவியாக இருந்த தமிழகம், இலங்கை, மலேசிய நாட்டை சேர்ந்தவர்கள் மீதான வழக்கில் கியூ பிரிவு போலீசார் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே என்மனங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் சித்தி சுலைஹா 52. இவரது அக்கா கணவர் மலேசிய குடியுரிமை பெற்ற அப்துல் ரஷீத் 58, அங்கு ஓட்டல் நடத்தி வந்தார். இவரது ஓட்டலில் வேலை பார்த்த இலங்கை கொழும்பு பகுதியை சேர்ந்த முகமது யாசீர் 40, மனைவி பாரிகா ரிஸ்மியா 35, ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இவர்கள் சித்தி சுலைஹா வீட்டில் 2015 முதல் 2021 வரை தங்கி ஆதார் கார்டு, சிம் கார்டுகளை பெற்றுள்ளனர். பாகிஸ்தான் நபரான ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிடம் தொடர்புள்ள முகமது மிப்லால் மவுலவியிடம் முகமது யாசீர் சிம்கார்டுகள் வாங்கி கொடுத்துள்ளார். அதை பயன்படுத்தி முகமது மிப்லால் மவுலவி மால்வேர் அட்டாக் மூலம் ராணுவ ரகசியங்களை திருடி வந்துள்ளார். ராணுவ அதிகாரிகளின் அலைபேசிகளை ஹேக் செய்து தகவல்களை அழித்துள்ளனர். இது குறித்து தகவல் தெரிந்த கியூ பிரிவு போலீசார் 2021ல் முகமது யாசீர், பாரிகா ரிஸ்மியா, அப்துல்ரஷீத், சித்தி சுலைஹா, முகமது மிப்லால் மவுலவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்குரைஞர் கார்த்திகேயன் ஆஜரானார். கியூ பிரிவு போலீசார் ஆஜராகி வழக்கின் விசாரணை குறித்து சாட்சியம் அளித்தனர். எதிர் தரப்பினர் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரினர். இதையடுத்து வழக்கின் விசாரணை டிச.,5க்கு ஒத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்