உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கூட்டணி மாறியதால் மரியாதை இழந்த பா.ம.க.,

கூட்டணி மாறியதால் மரியாதை இழந்த பா.ம.க.,

குமாரபாளயைம்: ''சந்தர்ப்பத்துக்காக அடிக்கடி கூட்டணி மாறியதால், அனைத்து அரசியல் கட்சியினரிடமும், பா.ம.க.,வினர் மரியாதை இழந்தனர். தற்போது, பா.ம.க., என்ற கட்சியே இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது,'' என, வன்னியர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் ராமமூர்த்தி பேசினார். குமாரபாளையம் ராசி மஹாலில், நாமக்கல் மாவட்ட வன்னியர் கூட்டமைப்புக் கூட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் பச்சியண்ணன் தலைமை வகித்தார். வன்னியர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் ராமமூர்த்தி பங்கேற்று பேசியதாவது: தமிழக சட்டசபை தேர்தலில், 30 தொகுதியில் போட்டியிட்ட, பா.ம.க., வெறும் மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் மூலம், வன்னியர்களை ஏமாற்றுவதையே ராமதாஸ், அன்புமணி குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வந்தனர் என்பதை, வன்னிய சமுதாய மக்கள் நன்கு உணர்ந்து கொண்டனர். இத்தோல்வியால், வரும் உள்ளாட்சி தேர்தலில், பா.ம.க., தலைகாட்டவே முடியாது. சந்தர்பத்துக்காக அடிக்கடி கூட்டணி மாறியதால், அனைத்து அரசியல் கட்சியினரிடமும், பா.ம.க.,வினர் மரியாதை இழந்தனர். பா.ம.க., என்ற கட்சியே இல்லாத ஒரு நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம், வன்னிய சமுதாய மக்களுக்கு, 15 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு, 10க்கும் மேற்பட்ட கடிதம் எழுதியும், ஒரு கடிதத்துக்கு கூட பதில் அளிக்கவில்லை. அதன் பலனை தற்போது அவர் அனுபவித்து வருகிறார். தேர்தலுக்கு முன் முதல்வர் ஜெயலலிதாவிடம் கடிதம் கொடுத்தபோது, கனிவுடன் பேசி கோரிக்கை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். எனவே, தற்போது முதல்வர் ஜெயலலிதாவிடம், 15 சதவீத இட ஒதுக்கீடான எங்களது கோரிக்கையை வைக்க உள்ளோம். அவர் நிச்சயம் நிறைவேற்றித் தருவார் என நம்புகிறோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி செயல்படுத்திய பல திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா சீரமைத்து வருகிறார். அதன் வழியில் இந்த சமச்சீர் கல்வி திட்டமும் ஒன்று. எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் மாணவ சமுதாயத்துக்கு தரமான கல்வி வழங்க உரிய நடவடிக்கையை முதல்வர் எடுத்து வருகிறார். இதை நாங்கள் வரவேற்கிறோம். கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவளித்தோம். வரும் உள்ளாட்சி தேர்தலிலும், அ.தி.மு.க.,வுக்கு எங்களது ஆதரவு தொடரும். பா.ம.க.,வில் இருக்கும் வன்னிய சமுதாய மக்கள், அதிலிருந்து விலகி வன்னிய கூட்டமைப்பில் இணையலாம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி