உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆஸி., வாலிபரை கடத்தி பணம் கேட்டு தாக்குதல் தி.மு.க., பிரமுகர் உள்பட 9 பேர் கைது

ஆஸி., வாலிபரை கடத்தி பணம் கேட்டு தாக்குதல் தி.மு.க., பிரமுகர் உள்பட 9 பேர் கைது

சேலம், ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த வாலிபர் உள்பட, 3 பேரை கடத்தி பணம் கேட்டு தாக்கியதாக, சேலம் தி.மு.க., பிரமுகர் உள்பட, 9 பேரை போலீசார் கைது செய்தனர்.ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் செல்வி. சேலம், அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷனை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டார். 'என் மகன், அவரது நண்பர்களை கடத்தி, சிலர் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்' என கூறினார். அதன்படி அழகாபுரம் போலீசார் விசாரித்து, அய்யந்திருமாளிகையில் உள்ள தங்கும் விடுதியில் இருந்த, மூன்று பேரை மீட்டனர். அவர்கள் உடலில் காயங்கள் இருந்ததால், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து கடத்தல் குறித்து விசாரித்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:ஆஸ்திரேலியாவை சேர்ந்த சூரியமூர்த்தி மனைவி செல்வி. இவரது மகன் வெங்கடேஷ், 29; தொழில் விஷயமாக, சேலம், அழகாபுரத்தில் உள்ள மாமா அந்தோணிராஜ் வீட்டில் வசிக்கிறார். அவருக்கு, 10 நாட்களுக்கு முன், கன்னங்குறிச்சியை சேர்ந்த, 13வது வார்டு தி.மு.க., செயலர் மகேந்திரன், 53, அறிமுகமானார். கோவை, காரமடையில், 16 பிளாட் போட்டிருப்பதாக கூறி, 2.36 கோடி ரூபாய்க்கு, வெங்கடேஷிடம் விலை பேசியுள்ளார். அவரும், 1.30 கோடி ரூபாயை, மகேந்திரன் வங்கி கணக்குக்கு கடந்த, 24ல் அனுப்பியுள்ளார். பின் தொழில் விஷயமாக பணம் தேவைப்பட, 27 லட்சம் ரூபாயை திரும்ப பெற்றுள்ளார்.இந்நிலையில் கடந்த, 30 இரவு, மகேந்திரன் உள்பட, 10க்கும் மேற்பட்டோர், வெங்கடேஷ், அவரது நண்பர்கள் இருவர் என மூவரை கடத்தி, பணம் கேட்டு ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். பணம் தரவில்லையேல் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். தாய்க்கு வெங்கடேஷ் தகவல் கொடுத்தார். அவர் எங்களுக்கு தகவல் கொடுக்க, மூன்று பேரையும் மீட்டோம்.இந்த வழக்கில் மகேந்திரன், 53, டிரைவர் தினேஷ்குமார், 28, முருகன், 31, விஜய் இருதயராஜ், 32, மற்றொரு மகேந்திரன், 47, சதீஷ் பாண்டியன், 55, அருண் பிரபாகரன், 29, கார்த்தி, 29, பிரவீன்குமார், 22, ஆகியோரை பிடித்துள்ளோம். தலைமறைவான நான்கு பேரை தேடுகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ