| ADDED : ஜூன் 01, 2024 06:33 AM
சேலம் : மான் முட்டி ஒப்பந்த ஊழியர் பலியானதால், உயிரியல் பூங்கா ஊழியர்களிடம் வன அதிகாரிகள் விசாரித்தனர். இதனால் பூங்காவுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது.சேலம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் பணியாற்றிய ஒப்பந்த ஊழியர் தமிழ்செல்வன், நேற்று முன்தினம் மான் முட்டியதில் பலியானார். இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி, பூங்கா உதவி இயக்குனர் செல்வகுமார் ஆகியோர், நேற்று உயிரியல் பூங்கா வன அலுவலர் கமலநாதன் உள்ளிட்ட வன ஊழியர்களிடம் விசாரித்தனர். அப்போது, கடமான் ஆக்ரோஷமாக தாக்கியதற்கு காரணத்தை, கேட்டறிந்தனர்.ஓசூரில் இருந்து வரவழைக்கப்பட்ட, கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையில் குழுவினர், பூங்காவில் உள்ள கடமான்களின் உடல்நிலை குறித்து பரிசோதனை செய்தனர். குறிப்பாக தாக்குதல் நடத்திய மானின் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது.விசாரணை முடிவில், இச்சம்பவம் எதனால் நடந்தது என தெரியவரும் என்று, வன அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விசாரணையால் பூங்காவுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. இதை அறியாமல் அங்கு வந்த சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.