| ADDED : செப் 21, 2011 01:09 AM
சேலம்: சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் அலுவலகத்தில் இயங்கி வந்த, நில
அபகரிப்பு மீட்பு குழு அலுவலகம், இட நெருக்கடியை காரணம் காட்டி, தெற்கு
சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனர் அலுவலக வளாகத்துக்கு மாற்றம்
செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தி.மு.க.,
ஆட்சியில், ரவுடிகள், தி.மு.க.,வினரால் அபகரிக்கப்பட்ட நிலங்களை
மீட்பதற்காக நில அபகரிப்பு மீட்பு குழு என்னும் தனிப்பிரிவு போலீஸில்
உருவாக்கப்பட்டது. இந்த பிரிவுக்கு தனியாக அலுவலகம் ஏற்படுத்தப்படாமல்
மாநகர பகுதியில் மாநகர மத்திய குற்றப்பிரிவுடனும், மாவட்டத்தில் மாவட்ட
குற்றப்பிரிவு அலுவலகங்களிலேயே செயல்பட்டு வந்தது. இந்நிலையில் நில
அபகரிப்பு மீட்பு குழுவுக்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதில் சேலம்
மாநகர நில அபகரிப்பு குழுவில் மட்டும், மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்,
அவரின் சகாக்கள் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர
பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், ரவுடிகளால் மீட்கப்பட்ட நில அபகரிப்பு
என தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகிறது. இதற்காக துவக்கப்பட்ட அலுவலக
வளாகத்தில் டவுன் போலீஸ் ஸ்டேஷன், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், மாநகர
மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் என மூன்று அலுவலகங்கள் இருந்தால், புகார்
தெரிவிக்க வருபவர்கள் மட்டுமின்றி போலீஸாரும் மிகுந்த சிரமத்தை சந்தித்து
வந்தனர். இந்த இட நெருக்கடியை குறைக்கும் வகையில் தற்போது நில அபகரிப்பு
மீட்பு குழு அலுவலகம், சேலம் தெற்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் அலுவலக
வளாகத்துக்கு மாற்றப் பட்டு செயல்பாட்டை துவக்கி உள்ளது.