கோவில் பூஜையை வீடியோ எடுத்த பெண்ணை தாக்கிய மூவர் மீது வழக்கு
இடைப்பாடி, தேவூர் அருகே, பொன்னம்பாளையம் பகுதியில் அய்யனாரப்பன் கோவில் பூஜையை வீடியோ எடுத்த பெண்ணை தாக்கிய, மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தேவூர் அருகே, பொன்னம்பாளையம் அய்யனாரப்பன் கோவில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினர் இடையே பிரச்னை நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம், ஆர்.டி.ஓ., லோகநாயகி தலைமையில், இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படாததால், பிரச்னை நீடித்தது. இதற்கிடையில், இந்த கோவிலை ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இணைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில், ஒரு தரப்பினர் நேற்று முன்தினம் கோவிலில் வழிபாடு செய்துள்ளனர். பூசாரி சுப்பிரமணி பூஜை செய்துள்ளார். இதையறிந்த மற்றொரு தரப்பினரை சேர்ந்த சிவராஜ் மனைவி ரேவதி, 31, என்பவர் கோவிலில் மணி சத்தம் கேட்பதாக சென்று, அங்கு பூஜை செய்பவர்களை தனது மொபைல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதையறிந்த பூசாரி சுப்பிரமணி மற்றும் முருகேசன் உள்ளிட்டவர்கள், வீடியோ எடுத்த ரேவதியை தடுத்ததோடு, தகாத வார்த்தைகளால் பேசி தள்ளி விட்டனர். காயமடைந்த ரேவதி இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தேவூர் போலீசார் விசாரித்து, பூசாரி சுப்பரமணி, முருகேசன் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து, தப்பியவர்களை தேடி வருகின்றனர்.