உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வரும் 21ல் தி.மு.க., இளைஞரணி 2வது மாநில மாநாடு

வரும் 21ல் தி.மு.க., இளைஞரணி 2வது மாநில மாநாடு

சேலம்: சேலத்தில் வரும், 21ல் நடைபெறும், தி.மு.க., இளைஞரணி 2வது மாநில மாநாட்டுக்காக, நாளை மாலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் நாளை சேலம் வருகிறார்.சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில், தி.மு.க., இளைஞரணி 2வது மாநில மாநாடு, கடந்த டிச., 17 ல் நடைபெறும் என சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கப்பட்டன. சென்னையில் மழை வெள்ளம் காரணமாக, மீண்டும் டிச., 24 க்கு ஒத்தி வைக்கப்பட்டது. அப்போதும் தென்மாவட்டங்களில் மழை வெள்ளம் மீட்பு பணி காரணமாக, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.இரண்டு முறை ஒத்தி வைப்புக்கு பின், வரும் ஜனவரி 21ல் மாநாடு நடைபெறும் என தி.மு.க., அறிவித்தது. இதன்படி, மிக பிரமாண்டமாக, இளைஞரணி மாநாட்டை நடத்தி முடிக்க, அமைச்சர்கள், நிர்வாகிகள் களம் இறங்கியுள்ளனர்.மாநாட்டு பந்தல், வாகனம் நிறுத்தும் இடம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், உணவு கூடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தி.மு.க., இளைஞரணி மாநாட்டு நுழைவு வாயிலுக்கு, ஈ.வெ.ரா., பெயர், மாநாட்டு திடலுக்கு அண்ணாதுரை பெயர், அரங்கத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவை தவிர பேராசிரியர் மேடை, வீரபாண்டியார் கொடிமேடை, முரசொலி மாறன் புகைப்பட கண்காட்சி, வீரபாண்டி ராஜா, வீரபாண்டி செழியன், சந்திரசேகர், நீட் போராளிகள் அனிதா மற்றும் தனுஷ் ஆகியோர் பெயர்களில் தோரண வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.நாளை மாலை, விமானம் மூலம் சேலம் வரும் ஸ்டாலின், மாநாட்டு திடலில் இரு சக்கர வாகன பேரணியை பார்வையிடுகிறார். தொடர்ந்து முதல்வர் முன்னிலையில், 'ட்ரோன் ேஷா' நடைபெறுகிறது. முடிந்ததும் மாநாட்டு திடலை பார்வையிட்ட பின் ஓய்வெடுக்கிறார். ஜன., 21, காலை, 9:00 மணிக்கு, மாநாட்டு திடலின் முன், 100 அடி கொடிக்கம்பத்தில், தி.மு.க., மகளிர் அணி செயலாளர் கனிமொழி கொடியேற்றுதலோடு மாநாடு துவங்குகிறது. தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. முன்னதாக பல்வேறு தலைப்புகளில் கட்சி பிரமுகர்கள் பேசுகின்றனர்.தொடர்ந்து, 22 தலைப்புகளில், பல்வேறு பேச்சாளர்கள் பேசுகின்றனர். மாலை, 6:00 மணிக்கு, இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி பேசுகிறார். பின்னர் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் பேசுகின்றனர். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் விழா சிறப்புரை ஆற்றுகிறார். மாநாட்டு மலர் வெளியீடு, 10 பாசறை நுால்கள் வெளியீடு, கட்சி முன்னோடிகளுக்கு மரியாதை செய்தல், 'நீட் விலக்கு நம் இலக்கு' அஞ்சல் அட்டை ஒப்படைப்பு, புதுகை பூபாளம் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி, பாடகர் தெருக்குரல் அறிவின் இசை நிகழ்ச்சி ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான ஏற்பாடுகளை மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் நேரு தலைமையில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட செயலாளர்கள் சிவலிங்கம், ராஜேந்திரன், செல்வகணபதி மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் செய்துள்ளனர்.டி.ஐ.ஜி.,யுடன் அமைச்சர் ஆலோசனைசேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வரும், 21ல், தி.மு.க., இளைஞர் அணி மாநில மாநாடு நடக்க உள்ளது. இதன் இறுதிக்கட்ட பணியை, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு, நேற்று பார்வையிட்டார். மாநாடு மேடை, முதல்வர் ஓய்வு எடுக்கும் அறை, சமையல் பிரிவு, முக்கிய நிர்வாகிகள், கட்சியினர் அமரும் இருக்கைகள், பாதை, பாதுகாப்பு வசதி, குடிநீர், மழைநீர் வடிகால், நவீன கழிப்பறைகளை பார்வையிட்டார்.தொடர்ந்து சேலம் டி.ஐ.ஜி., உமா, எஸ்.பி., அருண்கபிலனுடன் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட செயலர்கள் சிவலிங்கம், செல்வகணபதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், சேலம் எம்.பி., பார்த்திபன், மாவட்ட நிர்வாகிகள் கருணாநிதி, சுரேஷ்குமார், சின்னதுரை, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், நகராட்சி தலைவர்களான, ஆத்துார் நிர்மலாபபிதா, நரசிங்கபுரம் அலெக்சாண்டர், ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் மாநாட்டில் பங்கேற்க உள்ள கட்சியினருக்கு தரமான முறையில் உணவு தயாரித்து வழங்க, சமையலர்களிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி