நடப்பாண்டில் 5ம் முறை மேட்டூர் அணை நிரம்பியது
மேட்டூர்:நடப்பாண்டில், 5ம் முறை மேட்டூர் அணை நிரம்பிய நிலையில், வினாடிக்கு, 40,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, 119.02 அடியாக இருந்தது. கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட நீர் தொடர்ச்சியாக வந்ததால், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு நடப்பாண்டில், 5ம் முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. அதிகாலை, 4:00 மணிக்கு அணை நீர்மட்டம், 120.09 அடியாக இருந்தது. வினாடிக்கு, 1,16,683 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 90,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதில் பாசனத்துக்கு, 21,300 கனஅடி, உபரியாக, 68,700 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், 4:00 மணி முதல் நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. அதற்கேற்ப நீர்திறப்பும் குறைந்தது.