| ADDED : ஜன 18, 2024 10:15 AM
பெ.நா.பாளையம்: அரிய வகை 'சருகு மான்' வேட்டையில் ஈடுபட்ட ஒருவரை, வனத்துறையினர் கைது செய்தனர். அத்துடன் நாட்டு துப்பாக்கிகள் ஆறு பறிமுதல் செய்து, 11 பேரை தேடிவருகின்றனர்.பெத்தநாயக்கன்பாளையம், தும்பல் வனச்சரக பகுதியில், ஆத்துார் கோட்ட உதவி வனப்பாதுகாவலர் முருகன் தலைமையில் வனச்சரக அலுவலர் விமல்குமார், வனவர் முத்தமிழ் உள்ளிட்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது சின்னமூலப்பாடி காப்புக்காட்டில் நாட்டு துப்பாக்கி பயன்படுத்தி வன விலங்கு வேட்டையில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. அங்கு வனத்துறையினர் சென்றபோது, 12 பேர், 7 நாட்டு துப்பாக்கிகளுடன் இருந்தது தெரியவந்தது.அவர்கள், 6 துப்பாக்கிகளை போட்டுவிட்டு தப்பி ஓடினர். அதில் ஒருவரை பிடித்து விசாரித்ததில், சின்னமூலப்பாடியை சேர்ந்த, சுப்ரமணி, 50, என தெரியவந்தது. அவரிடம் அரிய வகையை சேர்ந்த, 2 அடி உயரம் கொண்ட 'சருகு மான்' இறந்த நிலையில் இருந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து சருகு மான் வேட்டையில் ஈடுபட்டதாக, 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் கைது செய்யப்பட்ட சுப்ரமணியை, ஆத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அங்குள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'அரிய வகையை சேர்ந்ததும், வனவிலங்கு பட்டியலில் முதலிடத்தில் உள்ள சருகு மானை வேட்டையாடியுள்ளனர். வேட்டையில் ஈடுபட்ட, 12 பேரில் ஒருவர் பிடிபட்டார். 7 துப்பாக்கியில், 6 பறிமுதல் செய்துள்ளோம். தப்பியவர்களை பிடிப்பதற்கு, 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது' என்றனர்.