சேலம்:''நீதிமன்ற தீர்ப்புகளை மதித்து, 1978-79 ஆண்டில் பணியில் சேர்ந்த
ஆசிரியர்களுக்கு சாதகமாக அரசாணை வெளியிட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்,'' என, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் அமைப்பு கோரிக்கை
விடுத்துள்ளது.தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் அமைப்பின் சேலம் மண்டல
பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் பரமசிவம் தலைமை வகித்து
பேசியதாவது:கடந்த, 1978-79ம் ஆண்டில் மேல்நிலைப்பள்ளியில் அவசரம் கருதி,
பி.எட்., முடிக்காதவர்களையும் ஆசிரியர்களாக தமிழக அரசு நியமனம் செய்தது.
பணியின் அவசியம் கருதி கல்வி ஆண்டு கோடை விடுமுறையில் கூட பணி நீக்கம்
செய்யாமல் தொடர்ந்து, பணிபுரிய கல்வித்துறை அனுமதி அளித்தது.ஆனால், 1981
ஏப்ரல் 28ம் தேதி வெளியிட்ட அரசு ஆணையில், பி.எட்., குறிப்பிட்ட
காலகட்டத்துக்குள் படிக்க வேண்டும் என்றும், பி.எட்., முடித்த தேதிதான்
பணிவரன்முறைக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்விதிகள் மேல்நிலைக்கல்வி துவக்கிய தேதியில்
அவசரம் கருதி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பெரும் அநீதியாக
அமைந்துள்ளது.இதை எதிர்த்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் அமைப்பு, மாநில
நிர்வாக தீர்ப்பாயம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என பல தீர்ப்புகளில்
ஆசிரியர்களுக்கு சாதகமாகவே கிடைத்தது. 15 ஆண்டுகளுக்கு மேல் வழக்கு
நடத்தியும், ஒரு வழக்கில் கூட, அரசும், கல்வித்துறையும் வெற்றி பெற வில்லை.
கடைசியாக மே 12 தேதி தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மீதான விசாரணையில்,
வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.அப்படியிருந்தும் இதுவரை எங்களுக்கு
சாதகமாக அரசாணை வழங்கப்படவில்லை. நீதிமன்ற தீர்ப்புகளை மதித்து, 1978-79
ஆண்டில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சாதகமாக அரசாணை வெளியிட, தமிழக
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கூண்ட்டத்தில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.