உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நகராட்சி கடைகளில் பலகோடி ரூபாய் ஊழல்

நகராட்சி கடைகளில் பலகோடி ரூபாய் ஊழல்

ஆத்தூர்: ஆத்தூர் நகராட்சி வணிக வளாக கடைகளை, உள் வாடகைக்கு விட்டும், பெயர் மாற்றம் என்ற பெயரிலும், பலகோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.ஆத்தூர் நகராட்சிக்கு சொந்தமாக பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட், ராணிப்பேட்டை, புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், 450க்கும் மேற்பட்ட வணிக வளாக கடைகள் உள்ளன. இந்த கடைகளை, தி.மு.க.,- அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர், 'பினாமி' பெயரில் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர்.அதில், புது பஸ் ஸ்டாண்டில், 80 கடைகள், பழைய பஸ் ஸ்டாண்டில், 13 கடைகள் என, 93 கடைகள் உள்ளன. 50க்கும் மேற்பட்ட கடைகளை உள்வாடகைக்கு விட்டு, கூடுதல் வாடகை வசூல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த தி.மு.க., ஆட்சியின் ÷பாது, நகராட்சி நிர்வாகத்துறை வணிக வளாக கடைகள், ஒருமுறை பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு, கடந்த மூன்று ஆண்டுகளில் கடைகள் பெயர் மாற்றம் என்ற பெயரில், 80 கடைகள் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.அதில், பலகோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக, பாதிக்கப்பட்ட நபர்கள், தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். மேலும், நகராட்சி சேர்மன், கமிஷனர் உள்ளிட்டோர், ஊழல் பணத்தை பங்கு போட்டுக் கொண்டதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து ஆத்தூரை சேர்ந்த ரவி, அவரது மனைவி சகுந்தலா ஆகியோர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள வணிக வளாக கடை எண், 12, 13 ஆகிய இரு கடைகளை, தி.மு.க., மாஜி மாவட்ட பிரதிநிதி புவனேஸ்வரன் என்பவர் வாடகைக்கு எடுத்து, எங்களுக்கு உள்வாடகைக்கு விட்டிருந்தார். கடந்த, 1987ம் ஆண்டு முதல், 27 ஆண்டுகளாக வளையல் கடை நடத்தி வருகிறோம்.கடையை நடத்துவதற்கு, 'அட்வான்ஸ்' தொகையாக, 8 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டார். தற்போது, இரு கடைகளையும், எங்கள் பெயரில் மாற்றம் செய்து தர, 19 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என, புவனேஸ்வரன் தெரிவித்தார்.அதற்கு மறுப்பு தெரிவித்ததால், நாங்கள் நடத்தி வரும் கடையை, தி.மு.க., பிரமுகர் புவனேஸ்வரனும், சீனிவாசன் என்பவரும் கூட்டாக நடத்தி வந்ததாக பொய்யான தகவல் தெரிவித்து, நகராட்சி கவுன்சில் கூட்டத்தில், சீனிவாசன் என்பவர் பெயரில் மாற்றம் செய்வதாக மன்ற பொருள் சேர்க்கப்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக நடத்தி வந்த இரு கடைகளுக்கு, 1.06 லட்சம் ரூபாயை நகராட்சிக்கு வைப்பு தொகையாக செலுத்திவிட்டு, சீனிவாசன் என்பவரிடம், 17 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.பல ஆண்டுகளாக ஜீவனம் செய்து வந்த நிலையில், வேறு நபருக்கு பெயர் மாற்றம் செய்து ஏமாற்றியுள்ளனர். அதனால், குடும்பத்துடன் தற்கொலை செய்யும் நிலையில் உள்ளோம். கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, மூன்று ஆண்டுகளில், 80க்கும் மேற்பட்ட வணிக வளாக கடைகள் பெயர் மாற்றம் செய்து, பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர்.வருவாய் இழப்பை ஏற்படுத்திய நகராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !