உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாஜி அமைச்சர் ஆதரவுடன் மேயர் விருப்ப மனு

மாஜி அமைச்சர் ஆதரவுடன் மேயர் விருப்ப மனு

சேலம்: சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு மீண்டும் போட்டியிட விரும்பி, திருச்சி மத்திய சிறையில் மாஜி மந்திரி வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்து, ரேகா பிரியதர்ஷினி ஆசி பெற்றார். மேயர் பதவி எஸ்.சி., ஒதுக்கீடானாலும், பொது ஒதுக்கீடானாலும், சீட் பெற்றுத்தருகிறேன், என மாஜியும், அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில், மேயர் பதவியை வாக்காளர்களே நேரடியாக ஓட்டு அளித்து தேர்ந்தெடுக்கும் முறை அமலுக்கு வருகிறது. கடந்த தேர்தலில், சேலம் மாநகராட்சியில், தி.மு.க., சார்பில் 12வது வார்டில் போட்டியிட்ட ரேகாபிரியதர்ஷினி, தி.மு.க., மற்றும் கூட்டணி கவுன்சிலர்கள் ஆதரவுடன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அப்போது, தி.மு.க., ஆளும் கட்சியாக இருந்ததால், உள்ளூர் அமைச்சரான வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவு, மேயருக்கு அதிகப்படியாக இருந்தது. மாஜி மந்திரியை, அப்பா என்று உரிமையோடு அழைத்து, அவர்களது வீட்டு உறுப்பினர்களில் ஒருவராக இருந்ததால், கட்சி நிர்வாகிகள் மட்டத்திலும், அவருக்கு மரியாதை கூடியது. மாநகராட்சிக்கு சொந்தமான காரையே, வீரபாண்டி ஆறுமுகம் பயன்பாட்டுக்காக ஒதுக்கிக் கொடுத்து, தனது விசுவாசத்தை காட்டினார்.சில நாட்களுக்கு முன், திருச்சி சிறையில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்தை பார்க்க, முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பெரியசாமி ஆகியோருடன் மேயர் ரேகா பிரியதர்ஷினியும் சென்றார். அப்போது, மாஜியிடம் நலம் விசாரித்து விட்டு, மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புவதாகவும், வாய்ப்பு பெற்றுத்தருமாறும் கேட்டுள்ளார்.'தாழ்த்தப்பட்ட பிரிவு, பொதுப்பிரிவு எது வந்தாலும், சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடு, சீட் உனக்கு தான், கட்சித் தலைமையிடம் பேசி விடுகிறேன்,' என வீரபாண்டி ஆறுமுகம் கூறியதாகவும், அதனால் மகிழ்ச்சியடைந்த மேயர், சேலம் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நேற்று விருப்ப மனுவை அளித்தார். மாஜியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி, என, வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள், பிரச்சார களத்தில் குதிக்கத் தயாராகி விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ