உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கவரிங் நகைகளுக்கு வாட் வரியில் விலக்கு

கவரிங் நகைகளுக்கு வாட் வரியில் விலக்கு

சேலம்:தமிழகத்தில், கவரிங் நகைகளுக்கு வாட் வரியில் இருந்து விலக்கு அளித்து, தொழில் மேம்பட உதவ வேண்டும் என, சேலம் பிளாஸ்டிக், பேன்ஸி உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.சேலம் பிளாஸ்டிக், பேன்ஸி, டிராவல் கூட்ஸ் உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கத்தின், 25வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. சங்க தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். சேலம் நகர அனைத்து வணிகர் சங்க பொதுச்செயலாளர் ஜெயசீலன், ப.வேலூர் நகர அனைத்து வர்த்தக சங்க செயலாளர் தியாகராஜன் பங்கேற்று பேசினர்.கூட்டத்தில், ஜோத்பூர் - கோவை புதிய வழித்தடம் அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும், இதுவரை ரயில் இயக்கப்படவில்லை. ரயில்வே நிர்வாகம் விரைவில் அமல்படுத்த வேண்டும். அரசுக்கு அதிக வருவாயை வழங்கும் வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு, குடும்ப நல நிதியை, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.பிளாஸ்டிக் பைகள் சம்மந்தமான பிரச்னைகளுக்கு, தயாரிப்பாளர்கள், வணிகர்கள், அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து விதிமுறைகளை பின்பற்றலாம். சேலம் மாநகரில், மூன்று இடங்களில் மேம்பாலம் கட்ட அரசு அனுமதியளித்துள்ளது. விரைவில் செயல்படுத்த வேண்டும். கவரிங் நகைகளுக்கு, வாட் வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். சேலம் - கரூர் அகல ரயில்பாதைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.சங்க செயலாளர் ராஜேந்திரன், செவ்வாய்பேட்டை மளிகை, ஷாப் வர்த்தக நலச்சங்க தலைவர் நடராஜன், சேலம் வணிகர் சங்க அறக்கட்டளை தலைவர் வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை