சேலம்: சேலத்தில், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட ஜெ.,பேரவை துணை செயலாளர், சுயேட்சையாக களமிறங்க முடிவு செய்துள்ளார். சேலம், கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க., செயலாளராக இருக்கும் சண்முகம், 55வது கோட்டத்தில் வசித்து வருகிறார். இவர், கோட்டம் மாறி, 58வது கோட்ட உறுப்பினராக போட்டியிட விருப்பமனு செய்ததையடுத்து, போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 58வது கோட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதோடு, 58 கோட்ட அ.தி.மு.க.,வினர், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதன் எதிரொலியாக, பகுதி ஜெ.,பேரவை துணை செயலாளர் கறிக்கடை பழனி, எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் விஸ்வநாதன், எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் குப்புசாமி ஆகியோர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இத்தகைய நடவடிக்கை, 58வது கோட்ட கட்சியினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட, 58வது கோட்டத்தை சேர்ந்த கறிக்கடை பழனி தலைமையில், அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், நீக்கப்பட்ட விஸ்வநாதன், குப்புசாமி, கோட்ட கவுன்சிலர் பாண்டியன், மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர் கண்ணன் இளங்கோ, மாணவரணி செல்வம், இளைஞரணி சங்கர், மகளிரணி செல்வி, தொழிற்சங்க விஜயகுமார், துணை செயலாளர் கோவிந்தராஜ், பழனிசாமி, சவுந்திரராஜன் உள்பட, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கறிக்கடை பழனி கூறியதாவது: எனக்கு துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்ட, பொதுமக்கள் பேராதரவோடு கோட்ட உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு, முதல்வர் ஜெ., காலில் வெற்றிக்கனியை சமர்ப்பிப்பேன். என்மீது அவதூறு பரப்பி, முதல்வருக்கு தெரியாமலேயே என்னை நீக்கப்பட்டது குறித்து, புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். இச்சம்பவம், சேலம் அ.தி.மு.க.,வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.