அ.தி.மு.க., கொண்டு வந்த 7.5 சதவீத இடஒதுக்கீடால் 600 மாணவரின் மருத்துவ கல்வி கனவு நிறைவேற்றம்
சேலம்: மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' தகுதி தேர்வு முடிவு வெளியானது. அதில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், கள்ளக்குறிச்சி அரசு மாதிரிப்பள்ளியில் படித்த தனியார் பஸ் டிரைவர் வேலனின் மகன் திருமூர்த்தி, 572 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அதே பள்ளியில் படித்த, தியாகதுருகத்தை சேர்ந்த முருகன் மகள் மதுமிதா, 551 மதிப்பெண் பெற்று, மாநில அளவில், 3ம் இடம் பிடித்தார். மேலும் சேலம், மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த, முத்தம்பட்டியை சேர்ந்த வேன் டிரைவர் வீரமுத்து மகன் நிர்மல், 519 மதிப்பெண் பெற்று மாநில அளவில், 10ம் இடம் பிடித்தார்.இவர்கள் நேற்று, சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள, அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்.,சை சந்திந்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு, இ.பி.எஸ்., பொன்னாடை போர்த்தி, கட்சி சார்பில், 'லேப்டாப்'களை பரிசாக வழங்கி பாராட்டினார்.அப்போது, 'அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, 7.5 சதவீத இட ஒதுக்கீடால், இதுவரை அரசு பள்ளிகளில் படித்த, 600க்கும் மேற்பட்ட மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு நிறைவேறியுள்ளது,'' என்றார்.அ.தி.மு.க.,வின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலர் குமரகுரு, எம்.எல்.ஏ., செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.