முதல்வர் தொடங்கிய உழவரை தேடி திட்டம் கிராமிய கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு
பனமரத்துப்பட்டி :பனமரத்துப்பட்டி, அம்மாபாளையத்தில், வேளாண் துறையின், 'அட்மா' திட்டத்தில், கிராமிய கலைநிகழ்ச்சி மூலம் வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. 'அட்மா' குழு தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.முதல்வர் ஸ்டாலின், 'உழவரை தேடி உழவர் நலத்துறை' திட்டத்தை நேற்று, சென்னையில் தொடங்கி வைத்தார். அத்திட்டத்தின் முக்கிய அம்சமான விவசாயிகளின் தேவையை கண்டறிதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சரியான நேரத்துக்கு தொழில்நுட்பம் வழங்குதல், கால்நடை நலன், உற்பத்தி மற்றும் விவசாயிகள் வருமானத்தை பெருக்குதல் குறித்து, கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுக்கு விளக்கினர்.மேலும் ஒரு துளி பல பயிர், அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் உள்ளிட்டவை குறித்து, நாடகம், பாடல்கள் மூலம் விளக்கினர். சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.வேளாண் உதவி இயக்குனர் சாகுல்அமீத், தோட்டக்கலை துணை அலுவலர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நலத்திட்ட உதவி வழங்கல்காடையாம்பட்டி தாலுகாவில், ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகத்தில் உதவி இயக்குனர் செல்வம் தலைமையில் நடந்த விழாவில், வேளாண் துணை இயக்குனர் நீலாம்பாள்(மாநில திட்டம்), 10 விவசாயிகளுக்கு மானிய விலையில் பயிர் விதைகள், நுண்ணுயிர் உரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வேளாண் பயிற்சி நிலைய துணை இயக்குனர் நாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.வீரபாண்டி வட்டாரத்தில் கடத்துார் அக்ரஹாரத்தில் நடந்த விழாவில், வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகாயினி தலைமை வகித்து பேசினார். அட்மா குழு தலைவர் வெண்ணிலா உள்பட பலர்பங்கேற்றனர்.மனு வாங்கிய பா.ம.க., - எம்.எல்.ஏ.,கொளத்துார், கோல்நாயக்கன்பட்டி ஊராட்சியில் நடந்த முகாமில், பா.ம.க.,வை சேர்ந்த, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், விவசாயிகளிடம் மனுக்களை வாங்கினார். சிலர், கோல்நாயக்கன்பட்டியில் வேளாண் துறை சார்பில் உலர்களம், குளிர்பதன கிடங்கு அமைக்க கோரிக்கை மனு கொடுத்தனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு மானிய விலையில் ராகி விதைகள் வழங்கப்பட்டன. வேளாண் உதவி இயக்குனர் சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நங்கவள்ளி, கோனுார் ஊராட்சியில் நடந்த முகாமிலும், எம்.எல்.ஏ., சதாசிவம், விவசாயிகளிடம் மனுக்களை வாங்கினார்.