ரூ.7.5 கோடி வாடகை பாக்கி மண்ணெண்ணெய் பங்குக்கு சீல் மாநகராட்சி நடவடிக்கை
காரைக்குடி:வாடகை பாக்கி செலுத்தாத, கூட்டுறவு பண்டக சாலை கடை, மருந்தகம், மண்ணெண்ணெய் பங்க், ரேஷன் கடைக்கு சீல் வைத்து , 2 பெட்ரோல் பங்குகளையும் காரைக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மூடினர்.காரைக்குடி மாநகராட்சிக்கு சொந்தமாக 200 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் பல கடைகள் வாடகை பாக்கி செலுத்தாததால் ஏற்கனவே மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சிக்கு கட்டடங்களில், கூட்டுறவு பண்டகசாலையின் ரேஷன் கடை, அம்மா மருந்தகம், மண்ணெண்ணெய் பங்க் செயல்படுகின்றன.இக்கட்டடங்களுக்கு வாடகை பாக்கி ரூ.1.50 கோடி இருப்பதாகவும் பலமுறை அறிவுறுத்தியும் வாடகை செலுத்தவில்லை எனவும் கூறி நேற்று மாநகராட்சி அதிகாரிகள் இக்கடைகளுக்கு சீல் வைத்தனர். மண்ணெண்ணெய் வாங்க வந்த மக்கள் பங்கிற்கு சீல் வைக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினர். பின்பு மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மண்ணெண்ணெய் பங்க் மட்டும் திறந்து விடப்பட்டது.இதே போல் மாநகராட்சிக்கு ரூ.6 கோடி வாடகை பாக்கி செலுத்தவில்லை எனக் கூறி பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் இரண்டு பெட்ரோல் பங்க் முன்பு கயறு கட்டி விற்பனையை நிறுத்தினர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்:கூட்டுறவு நிர்வாகம் வாடகை பாக்கி ரூ.1.50 கோடி வைத்துள்ளது. மண்ணெண்ணெய் பங்க் அத்தியாவசிய தேவை என்பதால் திறந்து விடப்பட்டுள்ளது.2 பெட்ரோல் பங்குகளும் வாடகை பாக்கியை செலுத்தினால் திறக்க அனுமதிக்கப்படும் என்றனர்.