| ADDED : ஜூன் 16, 2024 04:56 AM
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி வட்டாரத்தில் ஆவரங்காடு, மாரநாடு, கச்சநத்தம், தஞ்சாக்கூர் உள்ளிட்ட கிராமங்களில் கண்மாய்கரையை ஒட்டி 100 ஏக்கரில் வெள்ளைப்பூசணி, பாகற்காய், புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன.குறைந்த அளவு தண்ணீர், நோய் தாக்குதல்குறைவு உள்ளிட்ட காரணங்களால் பலரும்கோடை காலத்தில் வெள்ளைப்பூசணி சாகுபடி செய்கின்றனர்.கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் சமையலுக்கும், அல்வா தயாரிக்கவும் வெள்ளைப் பூசணிக்காயை விரும்பி வாங்கி செல்கின்றனர். வெள்ளைப் பூசணி 60நாட்களில் விளைச்சலுக்கு வந்து விடும், அதன்பின் 30 நாட்கள் வரை அறுவடை செய்யலாம், ஏக்கருக்கு 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்கின்றனர். ஏக்கருக்கு 40 முதல் 50 டன் காய்கள் வரை விளைச்சல் கிடைக்கும்.மதுரையில் இருந்து வியாபாரிகள் நேரடியாக தோட்டத்திற்கே வந்து வாங்கி சென்று விடுவார்கள் என்பதால் விவசாயிகளுக்கு அலைச்சல் இல்லை. விதை வாங்கும் போதே வியாபாரிகள் அட்வான்ஸ் கொடுத்து விடுவார்கள்.எனவே விவசாயிகள் எந்த கவலையும் இன்றி பயிரிடுவார்கள். வெள்ளைப்பூசணிக்கு பனிப்பொழிவு உகந்தது.இந்தாண்டு பனிப்பொழிவு குறைவு என்பதால் விளைச்சல் சற்று பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெயில் காரணமாக வெள்ளைப்பூசணியில் நோய் தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது. ஆனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைத்துள்ளது. கடந்தாண்டு கிலோ மூன்று முதல் ஐந்து ரூபாய் என விற்பனை செய்த நிலையில் இந்தாண்டு 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனையாகி வருவதால் வெள்ளைப்பூசணி அறுவடையில் விவசாயிகள்தீவிரம் காட்டி வருகின்றனர். ராமு என்பவர் கூறுகையில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெள்ளைப்பூசணி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றோம், மார்கழி , தை மாத தொடக்கத்தில் மதுரையில் இருந்து விதை வாங்கி வந்து பயிரிடுவோம். இந்தாண்டு சற்று தாமதமாக பயிரிட்டதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. விலை கூடுதலாக கிடைப்பதால்ஓரளவிற்கு லாபம் கிடைத்துள்ளது, என்றார்.