| ADDED : ஜூலை 25, 2024 04:30 AM
சிவகங்கை: அரசு போக்குவரத்து கழகத்தில் தனியார் மயத்தை புகுத்தும் தி.மு.க., அரசை கண்டித்து சிவகங்கையில் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தினர்.அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர், டிக்கெட் பரிசோதகர், டெக்னீசியன் உள்ளிட்ட ஊழியர்களுக்கான ஒப்பந்த பேச்சுவார்த்தை ஓராண்டிற்கு மேல் ஆகியும் துவக்கப்படவில்லை. பணி நிறைவு பெற்ற ஊழியர்களுக்கு அவர்களது பணிக்காலத்தை முடித்து 19 மாதங்களுக்கு மேலாகியும் அதற்கான பணப்பலன் கிடைக்கவில்லை.பென்ஷனர்களுக்கு 105 மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல், புறக்கணிக்கப்படுகிறது. காலிப்பணியிடங்களை நிரப்பாமல், தனியார் மயமாக்கும் நோக்கில், ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கும் தி.மு.க., அரசை கண்டித்து, அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தினர்.சிவகங்கையில் மண்டல பொது செயலாளர் தெய்வீரபாண்டியன், துணை பொது செயலாளர் சமயதுரை, கிளை தலைவர் ஜான்பீட்டர், பொருளாளர் வாசுதேவன் ஆகியோர் மக்களை சந்தித்து தி.மு.க., அரசின் தனியார் மய கொள்கையை கண்டித்து நோட்டீஸ் அளித்தனர். அதே போன்று காரைக்குடியில் மண்டல துணை தலைவர் சிவக்குமார், தேவகோட்டையில் மண்டல பொருளாளர் தியாகராஜன், திருப்புத்துாரில் கிளை பொருளாளர் காமராஜ் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தினர்.