| ADDED : மே 03, 2024 05:41 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம் பழுதானதால் அவசரத்திற்கு ரோயாளிகளை மதுரைக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மே 1 முதல் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம் பழுதானது. அவசர சிகிச்சை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மூளை, தண்டுவடம், நரம்பு, எலும்புகளில் ஏற்படும் பாதிப்பை எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மூலம் தான் கண்டறிய முடியும். மருத்துவமனைக்கு மூளையில் பிரச்னை, மூட்டு வலி, தசை பிரச்னை, நரம்பியல் பிரச்னைகளுக்காக ஸ்கேன் எடுக்க மாவட்டம் முழுவதிலும் இருந்து 20க்கும் மேற்பட்டோர் தினமும் வருகின்றனர்.அரசு மருத்துவக் கல்லுாரியில் முதல்வரின் காப்பீட்டு திட்டம் இருந்தாலும் பணம் கொடுத்து எடுப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரப்படுகிறது.சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கடந்த இரண்டு தினங்களாக எம்.ஆர்.ஐ., ஸ்கேனில் பழுது ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் மதுரை அரசு மருத்துவ மனைக்கு செல்லும் சூழல் உள்ளது. மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் உடனடியாக பழுதடைந்த எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர். எம்.ஆர்.ஐ., ஸ்கேன் நிர்வாகத்தினர் கூறுகையில், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம் இருக்கும் அறையில் ஏசி பழுதாகி உள்ளது.ஏசியை சரி செய்த பிறகு தான் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரத்தை இயக்க முடியும். இன்னும் இரண்டு நாட்களில் சரி செய்யப்படும் என்றனர்.