காளையார்கோவிலில் வீட்டு வரி ரசீது வழங்க ரூ.5000 லஞ்சம் தலைவர் உட்பட 3 பேர் கைது
சிவகங்கை,:காளையார்கோவிலில் வீட்டு வரி ரசீது போட ரூ.5000 லஞ்சம் பெற்றதாக ஊராட்சி தலைவர், அவரது கணவர், ஊழியர் ஆகிய 3 பேரை சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி தலைவர் ஜோஸ்பின் மேரி 67. இவரது கணவர் முன்னாள் ராணுவ வீரர் அருள்ராஜ் 71. இவர் இதே ஊராட்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். இந்த ஊராட்சியில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக குமார் 43 பணிபுரிகிறார்.காளையார்கோவில் எஸ்.எஸ்., நகரை சேர்ந்த காளீஸ்வரன் 43, என்பவர் புதிதாக கட்டிய வீட்டிற்கு வீட்டு வரி ரசீது கேட்டு ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்கு ஊராட்சி தலைவர் லஞ்சமாக ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளார். இந்த பணத்தை தருவதாக கூறிய காளீஸ்வரனை, நேற்று மதியம் 12:00 மணிக்கு ஊராட்சி அலுவலகத்திற்கு வருமாறு தெரிவித்துள்ளனர்.ஊராட்சி அலுவலகத்தில் இருந்த அருள்ராஜ், குமார் ஆகியோரிடம் ரூ.5 ஆயிரத்தை காளீஸ்வரன் கொடுத்துள்ளார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ஜான்பிரிட்டோ, இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஜேசுதாஸ், எஸ்.ஐ., ராஜாமுகமது ஆகியோர் அருள்ராஜ், குமாரை கைது செய்தனர். பள்ளி நிகழ்ச்சியில் இருந்த ஊராட்சி தலைவரையும் கைது செய்தனர்.