108 ஆம்புலன்ஸ் மூலம் 46,062 பேர் மீட்பு
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் சாலை விபத்துக்களில் சிக்குவோரை மீட்டு, அரசு மருத்துவமனைகளில் சேர்த்து உரிய சிகிச்சை பெற்றுத்தரும் முயற்சியில் 108 ஆம்புலன்ஸ் சேவை ஈடுபட்டு வருகிறது. 2024ல் நடந்த சாலை விபத்தில் இருந்து 9186 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பிரசவ கால கர்ப்பிணிகள் 6417 பேர்களை மீட்டு வந்துள்ளனர். குறிப்பாக இதய கோளாறு மூலம் பாதிக்கப்பட்ட 3984 நோயாளிகளை மீட்டு உரிய நேரத்தில் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிவகங்கை மாவட்டம்அதிக கிராமங்களை உள்ளடக்கியுள்ளதால், இங்கு 108 ஆம்புலன்ஸ் சேவை முழு அளவில் பயன்படுகிறது. போனில் அழைத்த 12 நிமிடங்களில் மீட்பு பணியில் ஆம்புலன்ஸ் ஈடுபட்டு வருகிறது. போனில் அழைப்பு வந்ததும், அந்த வண்டியை ஜி.பி.எஸ்., கருவி மூலம் கண்காணித்து உடனுக்குடன் அனுப்பி வருகின்றனர். நகரில் 2 முதல் 4 கி.மீ.,க்கு வாகனம் என்ற விகிதத்திலும், கிராமங்களில் 12 முதல் 15 கி.மீ., துாரத்திற்கு ஒரு வாகனம் என்ற ரீதியில் பயன்படுகிறது. 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருங்காயத்திற்கு கட்டுபோடுதல், ஆக்சிஜன்வழங்குதல் போன்ற முதலுதவியை ஆம்புலன்ஸ் உதவியாளர்கள் தருகின்றனர்.