| ADDED : மார் 01, 2024 01:25 AM
மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆர்.சி., நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் நெற்றியில் திருநீறு, குங்குமம் அணிந்து வந்ததை ஆசிரியர் ஒருவர் கண்டித்துள்ளார். இதை கண்டித்து ஹிந்து முன்னணியினர் பள்ளி ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மானாமதுரை ஆர்.சி., அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் நெற்றியில் திருநீறு, குங்குமம் அணிந்து சென்றார். அதை கவனித்த பள்ளி ஆசிரியர் ஒருவர் அந்த மாணவரை அழைத்து இனிமேல் இது போன்று நெற்றியில் அணியக்கூடாது என்று கண்டித்துள்ளார். இதை மாணவர் தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் ஹிந்து முன்னணி நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். ஹிந்து முன்னணி ஒன்றிய தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குப்புராம், மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், 'மாணவர்கள் ஜாதி மற்றும் மத அடையாளங்களை குறிப்பிடும் வகையில் கைகள் மற்றும் கழுத்தில் கயிறு கட்டி வருவதை தவிர்க்க வேண்டும் என கூறி வருகிறோம்,' என்றனர்.