மதுரை-ராமேஸ்வரம் 4 வழிச்சாலையில் விளக்கு எரியாததால் தொடரும் விபத்து
மானாமதுரை: மதுரை, ராமேஸ்வரம் 4 வழிச்சாலையில் மானாமதுரையில் பல்வேறு இடங்கள் இருள் சூழ்ந்து காணப்படுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.மதுரையிலிருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை, பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரை இருவழிச்சாலை 7ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தற்போது பரமக்குடியிலிருந்து ராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.மானாமதுரையில் நான்கு வழி சாலை செல்லும் முத்தனேந்தல், ராஜகம்பீரம் சர்வீஸ் ரோடுகளிலும், மானாமதுரை பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஊருக்குள் ரோடு பிரியும் இடத்தில் மின் விளக்கு வசதி இருந்தும் பெரும்பாலான நாட்களில் மின் விளக்குகள் எரிவதில்லை, இப்பகுதி இருட்டில் மூழ்கியுள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.4 வழிச்சாலை ஆணைய அதிகாரிகள் சர்வீஸ் ரோடு மற்றும் விபத்துக்கள் ஏற்படும் இடங்களில் மின் விளக்குகள் எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.