கால்நடை வளர்ப்பு இருமடங்காக உயர்வு கூடுதல் மருந்தகம், டாக்டர் தேவை
திருப்புவனம்:திருப்புவனத்தில் பத்தாண்டுகளில் கால்நடை வளர்ப்பு இருமடங்காக உயர்ந்த நிலையில் அதற்கு ஏற்ப கால்நடை மருந்தகம்,டாக்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். மாவட்டத்திலேயே விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு திருப்புவனம் தாலுகாவில் தான் பிரதான தொழிலாக உள்ளது. கீழடி, கொந்தகை, மணல்மேடு, பெத்தானேந்தல், அல்லிநகரம், பழையனூரில் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. காரைக்குடி ஆவின் நிறுவனத்திற்கு மாவட்டத்திலேயே திருப்புவனத்தில் இருந்துதான் அதிகளவு பால் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதி என்பதால் கால்நடைகளுக்கு தேவையான உணவு, குடிநீர் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாவிட்டாலும் பல விவசாயிகள் ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்வதால் வயல்வெளிகளில் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர், புற்கள் தடையின்றி கிடைக்கின்றன. கால்நடைகள் அதிகரிப்பு
10 ஆண்டிற்கு முன்பு வரை திருப்புவனம் பகுதியில் 310 எருமை, 9,396 பசு, காளை, 11,686 செம்மறி ஆடு, 17,231 வெள்ளாடு இருந்தன. ஆனால் இன்று 533 எருமை, 20,615 செம்மறி ஆடு, 21,370 வெள்ளாடுகள் உள்ளன. ஆனால் அதற்கு ஏற்ப கால்நடை மருந்தகம், டாக்டர்கள் இல்லை. எனவே இப்பகுதியில் கூடுதல் மருந்தகம், டாக்டர்களை நியமிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.