ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு கூரை மீது ஏறி போராட்டம்
இளையான்குடி:இளையான்குடி அருகே வழக்கானியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது வீட்டின் கூரை மீது ஏறி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர்.சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள வழக்கானி கிராமத்தில் உள்ள ஒரு தெருவில் 3 வீடுகள் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் நேற்று வழக்கானி கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அகற்றினர். 2வீடுகளை அகற்றிய பிறகு மூன்றாவதாக வீட்டை இடிக்க முயன்ற போது அந்த வீட்டின் உரிமையாளர் ராசையா மற்றும் அவரது உறவினர் சரவணன் வீட்டின் கூரை மீது ஏறியும், மண்ணெண்ணெய் ஊற்றியும் தற்கொலை செய்ய முயன்றனர்.போதிய போலீசார் இல்லாத காரணத்தினால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்தி விட்டு மற்றொரு தேதியில் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்படும் எனஇளையான்குடி தாசில்தார் முருகன் , வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.உடனே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்று அவர்களின் வாகனங்களை மறித்து மறியல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளையான்குடி போலீசார் சமரசம் செய்து அதிகாரிகளின் வாகனங்களை விடுவித்தனர். வீட்டின் உரிமையாளர் ராசையா , உறவினர் சரவணனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.