| ADDED : பிப் 11, 2024 12:26 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்கள் தமிழக அரசின் கல்வி உதவித்தொகைக்கு பிப்.29க்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். நடப்பாண்டில் புதிய மாணவர்கள் https://ssp.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் Student Login- இல் சென்று ஆதார் எண் அளித்து e-KYC verification செய்திடல் வேண்டும். இக்கல்வி உதவித்தொகை புதியதிற்கான (Fresh) இணையதளம் (Scholarship portal) 2024 பிப்.1 முதல் செயல்பட துவங்கியுள்ளது.புதிய விண்ணப்பங்களை மாணவர்கள் பிப்.29க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லுாரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என கலெக்டர் தெரிவித்தார்.