உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சட்டவிரோதமாக வெளிநாடு செல்லாதீர் கலெக்டர் பொற்கொடி எச்சரிக்கை 

சட்டவிரோதமாக வெளிநாடு செல்லாதீர் கலெக்டர் பொற்கொடி எச்சரிக்கை 

சிவகங்கை : சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதை தவிர்க்க உரிய விதிப்படி சென்று பாதுகாப்பான பணியை செய்து பயன்பெற வேண்டும் என சிவகங்கை கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது: வெளிநாடு வேலைக்கு செல்ல விரும்புவோர் முதலில் மத்திய அரசின் இ-மிக்ரேட் (https://emigrate.gov.in) இணையதளத்தில் பதிவு செய்து, அங்கீகரிக்கப்பட்ட ஏஜன்ட் மூலமே செல்ல வேண்டும். எந்த நிறுவனத்தில் வேலைக்கு செல்கிறீர்கள் என்ற தகவல்களை முன்னதாக உறுதி செய்து கொள்ளுங்கள். வேலைக்கான ஒப்பந்தம், விசா மற்றும் முக்கிய ஆவணங்களை பெற்ற பிறகு தான் பயணிக்க வேண்டும். வேலைக்கான ஒப்பந்தத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும். அதில் தான் சம்பளம், வேலைவிபரம், உரிமை, பொறுப்பு இடம் பெற்றிருக்கும். வேலைக்கு செல்லும் நாட்டின் சட்டம், கலாசாரத்தை மதித்து நடக்க வேண்டும். பல நாடுகளில் வேலைக்கு செல்லும் நபர் நாடு திரும்புவதற்கு பெர்மிட் பெறுவது அவசியம். ஒப்பந்த காலத்தில் வேலைக்கு சென்ற நிறுவனம், முதலாளியிடமிருந்து வேறு நிறுவனத்திற்கோ, முதலாளியிடமோ மாற்றம் செய்ய முடியாது. பதிவு பெறாத போலி முகவரிகள் மூலம் வேலைக்கு செல்லும் நோக்கத்தில் வெளிநாடு பயணிக்காதீர்கள். சுற்றுலா விசாவில் வெளிநாடு வேலைக்கு செல்வது, அந்நாட்டில் சட்டவிரோதமாக கருதப்படும். இது கைது, அபராதம், சிறைதண்டனைக்கே அழைத்து செல்லும். வெளிநாட்டு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு, அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை இந்திய எண் 1800 309 3793, வெளிநாடு எண்: 0 80 6900 9900 எண்ணிற்கு அழைக்கலாம். தமிழக அரசின் https://nrtamils.tn.gov.inஎன்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடும் நபர்கள், குறுக்கு வழிகளை தவிர்த்து, அரசு அமைத்துள்ள சட்டபூர்வமான வழியில் செல்லும்போதுதான் பாதுகாப்பான வாழ்க்கை ஏற்படுத்த முடியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ