| ADDED : பிப் 01, 2024 04:19 AM
சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவமனை முன் புற்றீசல் போல் அனுமதியின்றி ரோட்டை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண்டும் என சிவகங்கை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தினர்.சிவகங்கை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் மஞ்சுளா பாலசந்தர் (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணை தலைவர் கேசவன் (அ.தி.மு.க.,), பி.டி.ஓ.,க்கள் சுப்பிரமணியன், பத்மநாபன் (ஊராட்சி) முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதம்:சையது இப்ராகிம், உதவி பொறியாளர்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட அரசு ரூ.5.36 கோடி ஒதுக்கியது. இப்பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டதும், பணி துவங்கும்.பி.பத்மாவதி (தி.மு.க.,): கட்டாணிபட்டி அரசு துவக்கப்பள்ளியில் பழைய வகுப்பறை கட்டடம் இடித்து, 2 ஆண்டாகியும் புதிய கட்டடம் கட்டவில்லை. அழகமானேரியில் புதிய குடிநீர் தொட்டி கட்ட வேண்டும்.டி.கேசவன், (அ.தி.மு.க.,)துணை தலைவர்: சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி நுழைவுவாயிலில் அனுமதியற்ற பெட்டிக்கடைகள் ரோட்டை ஆக்கிரமித்துள்ளன. இங்கு பாலிதீன் கழிவால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. சிகிச்சைக்கு செல்வோரை, மதுரைக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.ரமேஷ் (தி.மு.க.,): ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் மது அருந்திவிட்டு, ஊழியர்களிடம் தகராறில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பத்மநாபன், பி.டி.ஓ., (ஊராட்சி): கிராமங்களில் ஜல்ஜீவன் திட்ட குடிநீர் குழாய்களுக்கு மக்களின் பங்களிப்பாக 10 சதவீதமும், ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்கு 5 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.எம்.கருப்பணன் (தி.மு.க.,): அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவக ஊழியர்களுக்கு, சம்பள உயர்வு வழங்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.