கிராம ஊராட்சி செயலர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு; அரசு முடிவுக்கு சங்கங்கள் வரவேற்பு
சிவகங்கை; தமிழகத்தில் கிராம ஊராட்சி செயலர்களை கலந்தாய்வு(கவுன்சிலிங்) மூலம் பணியிட மாற்றம் செய்யும் மாநில அரசு முடிவை பல்வேறு சங்கங்கள் வரவேற்றுள்ளன.தமிழகத்தில் 12,525 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு பணிபுரியும் ஊராட்சி செயலர்கள் மூலம் ஊராட்சி வளர்ச்சிபணிகள், அலுவலக நிர்வாகம் நடக்கிறது. இந்நிலையில் ஒரே ஊராட்சியில் செயலர்கள் பல ஆண்டுகளாக பணிபுரிவதாக அரசுக்கு புகார் சென்றது. இதனால் ஒரே இடத்தில் பணிபுரியும் ஊராட்சி செயலர்களை கவுன்சிலிங் மூலம் பணியிட மாற்றம் செய்ய ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் பி.பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.வட்டார அளவில் அந்தந்த பி.டி.ஓ.,(ஊராட்சிகள்)க்களே கவுன்சிலிங் மூலம் பணியிட மாறுதல் செய்யலாம். வட்டாரம் விட்டு வட்டார மாறுதல் கவுன்சிலிங்கை கலெக்டர் பி.ஏ.,(வளர்ச்சி) நடத்த வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கவுன்சிலிங் ஊரக வளர்ச்சி, ஊராட்சிதுறை இயக்குனர் மேற்கொள்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனால் ஊராட்சி செயலர்கள் ஒரே கிராம ஊராட்சியில் பல ஆண்டுகள் பணிபுரிவது தவிர்க்கப்படும். ஊராட்சி செயலர்கள் முதுநிலை, நிர்வாக அனுபவத்திற்கு ஏற்பவும், வயது மற்றும் உடல் நிலை சார்ந்து மாறுதல் தரும்போது, அவர்களின் நிர்வாக திறன் மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பல சங்கங்கள் வரவேற்றுள்ளன. ஊராட்சி செயலர் அந்தஸ்து உயரும்
தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க மாநில தலைவர் ஏ.ஜான்போஸ்கோ கூறியதாவது: மூன்றாண்டுகளாக மாநில அரசிடம் இக்கோரிக்கைகளை வலியுறுத்தினோம். அரசின் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். இதனால் ஊராட்சி செயலர்கள் மீதான பி.டி.ஓ.,க்களின் பழிவாங்கும் நடவடிக்கை, அரசியல் தலையீடு தவிர்க்கப்படும். மூன்றாண்டுக்கு ஒரு முறை பணிமாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும். இதனால் ஊராட்சி செயலர்களுக்கு தேர்வு, சிறப்பு நிலை அந்தஸ்து கிடைக்கும் என்றார்.