| ADDED : ஜன 26, 2024 05:28 AM
திருப்புத்துார்: பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற ஆன் லைனில் விண்ணப்பித்தும் பல மாதங்களாக கிடைக்காமல் நிலுவையில் உள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை ஆகிய இரு வருவாய் கோட்டங்கள் உள்ளன. தேவகோட்டை கோட்டத்தின் கீழ் திருப்புத்துார்,சிங்கம்புணரி, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய தாலுகாக்கள் உள்ளன. ஓராண்டுக்கும் மேலாக பதியப்படாத பிறப்பு, இறப்பு சம்பந்தமான சான்றிதழ் பெற ஆன்லைனில் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் விண்ணப்பிக்கின்றனர்.இந்த விண்ணப்பங்கள் மீண்டும் சம்பந்தப்பட்ட தாலுகாவிலுள்ள வி.ஏ.ஓ.,ஆர்.ஐ., தாசில்தார் ஆகியோருக்கு சென்று பரிசீலிக்கப்படுகிறது. பரீசீலிக்கப்படும் இந்த விண்ணப்பங்கள் மீண்டும் தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் செல்ல பல மாதங்களாகிறது. பல மனுக்கள் கிடப்பிலேயே தாசில்தார் அலுவலகங்களில் போடப்பட்டு விடுகின்றன. இதனால் பொதுமக்கள் பல கி.மீ.துாரம் பயணம் செய்து, அலைந்து விசாரிக்க வேண்டியுள்ளது.விசாரிக்க செல்லும் பொது மக்களுக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் சரியான பதிலும் கிடைப்பதில்லை.வக்கீல் முருகேசன் கூறுகையில், மாதக் கணக்கில் தாமதமாவதால் பொது மக்களின் முக்கியப்பணிகளும் தேக்கமடைகிறது. பொருள், காலவிரயத்தைத் தவிர்க்க அரசு கோட்டாட்சியர் அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்கான சிறப்பு முகாமை மாதந்தோறும் நடத்தி விண்ணப்பங்களுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும்' என்றார்.