சிவகங்கையில் பிறப்பு, இறப்பு சான்று வழங்குவதில் இழுபறி
சிவகங்கை :சிவகங்கை நகராட்சியில் பிறப்பு இறப்பு சான்றிதழுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்து வாரக் கணக்கில் காத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பிறப்பு இறப்பு குறித்த பதிவுகளுக்கு நகராட்சியை அணுகும் சூழல் உள்ளது. தற்போது பள்ளி, கல்லுாரிகளில் அட்மிஷன் நடக்கிறது.இதற்காக பிறப்பு சான்றிதழ்களில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம், பெற்றோர் இனிஷியல் திருத்தம் செய்வதற்கு தினமும் 10க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வருகிறது. திருத்தம் சான்றிதழ் வழங்குவதற்கு நகராட்சியில் ஊழியர்கள் இல்லை. நகராட்சியில் 2 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன.இதில் ஒருவர் மட்டுமே பணியில் இருந்தார். அவரும் நீண்ட நாட்களாக மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார்.இங்கு பணியில் இருந்த சுகாதார அலுவலரும் கடந்த வாரம் பணி மாறுதலில் ஊட்டி சென்றுள்ளார். இதனால் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விண்ணப்பித்து காத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. நகராட்சியில் துாய்மை சார்ந்த பணிகளை ஆய்வு மேற்கொள்வதிலும் தொய்வு ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் விண்ணப்பித்தோருக்கு தடையின்றி பிறப்பு, இறப்பு சான்று வழங்க வேண்டும்.