கீழடியில் திட்ட விபர பலகையின்றி கட்டுமான பணியால் ஏமாற்றம்
கீழடி: கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியக கட்டட பணிகள் கடந்த ஜனவரி முதல் நடந்து வரும் நிலையில் இதுவரை கட்டட பணிகள் குறித்த எந்த விபர பலகையும் வைக்கப்படாதது கேள்வியை எழுப்பியுள்ளது.கீழடியில் தமிழக தொல்லியல் துறை நான்கு, ஐந்து, ஏழு ஆகிய கட்டங்களாக நடந்த இடங்கள் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றும் பணி கடந்த ஜன., முதல் தொடங்கி நடந்து வருகிறது. நான்கரை ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 67 ஆயிரத்து 343 சதுர அடியில் இரண்டு அரங்குகளாக திறந்த வெளி அருங்காட்சியகம் அமைய உள்ளது. ரூ.17.80 கோடி செலவில் பணிகள் நடைபெறும் என அறிவித்தனர்.பொதுவாக அரசின் திட்டங்கள் செயல்படுத்தும் போது திட்டம் தொடங்கும் நாள், முடிவடையும் நாள், திட்ட மதிப்பீடு, ஒப்பந்தகாரர் பெயர், பராமரிக்கும் நாட்கள், திட்டம் செயல்படுத்தும் துறை ஆகியவை பற்றிய விபர பலகை வைக்கப்பட வேண்டும். பொதுமக்கள் காணும் வகையில் விளம்பர பலகை அமைக்கப்பட வேண்டும். கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியக பணிகள் தொடங்கி 4 மாதங்கள் கடந்த நிலையில் இன்று வரை விபர பலகை வைக்கப்படவே இல்லை.திறந்தவெளி அருங்காட்சியக பணிகளை கலெக்டர், ஆர்.டி.ஓ., அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆய்வு செய்துள்ள நிலையில் விபர பலகை வைக்கப்படாதது கேள்வியை எழுப்பியுள்ளது. அடுத்தாண்டு ஆக., மாதத்தில் பணிகள் முடிவடையும் என தெரிவித்த நிலையில் அருங்காட்சியக பணிகள் குறித்த விபர பலகை வைக்கப்பட வேண்டும்.