| ADDED : ஜன 13, 2024 01:17 AM
சிவகங்கை:''தி.மு.க., ஆட்சி நிர்வாகம் கலெக்சன், கரப்ஷன், கமிஷனில்' மூழ்கியுள்ளது. இந்த மூன்று 'சி'யில் மட்டுமே சிறந்த அரசு என 'கின்னஸ்' புத்தகத்தில் இடம் பெறும் நிலை உள்ளது,'' என, சிவகங்கையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.அவர் கூறியதாவது: சிவகங்கை நகராட்சியில் 100 சதவீத குடிநீர் வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். வரி உயர்த்துவது குறித்த மத்திய அரசின் வழிகாட்டுதல் 2017 ல் வெளியானது. அதற்காக நாங்கள் ஆட்சியில் உள்ளபோது அந்த வரியை உயர்த்தவில்லை. அதே நடவடிக்கையை நகராட்சி பின்பற்றலாம். அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். நீதிமன்றம் ஊழியர்களுக்கான பலன்களை கிடைக்க ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும் என கூறியதே தவிர போராட்டம் நடத்தியது தவறு என சொல்லவில்லை. நாட்டின் நிலைமைகளை அறியாத 'பொம்மை முதல்வராக' ஸ்டாலின் செயல்படுகிறார். அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.பா.ஜ.,வை விமர்சிக்க வேண்டும் என்பது அ.தி.மு.க., நோக்கம் அல்ல. 2024 லோக்சபா தேர்தல் மட்டுமின்றி, அடுத்த சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என முன்னாள் முதல்வர் பழனிசாமி பொதுக்குழுவில் அறிவித்து விட்டார். மத்திய அரசுக்கு போதிய அழுத்தத்தை அ.தி.மு.க., தான் கொடுத்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இனி அ.தி.மு.க., பெயரை பயன்படுத்துவது தேவையற்றது. வழக்கை சந்திக்கும் அமைச்சர்கள்
தி.மு.க., ஆட்சியில் 20 அமைச்சர்கள் வருமான வரித்துறை உள்ளிட்ட வழக்குகளை சந்தித்து வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் சிறையில் வைத்து தான் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவை கூட்டத்தை நடத்த வேண்டிய நிலை வரும். எம்.பி., தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். பத்திரிகையாளர் நல வாரியம் முதலில் அறிவித்தது அ.தி.மு.க., தான் என்றார்.