உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நுாலகத்திற்கு மாற்று இடம் தேர்வு செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

நுாலகத்திற்கு மாற்று இடம் தேர்வு செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் அரசு புறம்போக்கு வண்டிப்பாதை நிலத்திற்கு பதிலாக 'கிராமசாவடி' இடத்தை தேர்வு செய்து நுாலகம் அமைக்க தாக்கலான வழக்கில் கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. சாலைக்கிராமம் ராதா கிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: சாலைக்கிராமத்தில் கிளை நுாலகம் 1965 லிருந்து செயல்படுகிறது. ஓடுகள் வேய்ந்த கூரையிலான அக்கட்டடம் பழுதடைந்துள்ளது. 17 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. ஆறுபேர் மட்டுமே அமர்ந்து புத்தகங்களை வாசிக்க முடியும். இட நெருக்கடி உள்ளது. மாற்று இடம் தேர்வு செய்து புது கட்டடம் அமைக்க வலியுறுத்தி கலெக்டர், மாவட்ட நுாலக அலுவலருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்தேன். இரு நீதிபதிகள் அமர்வு,'மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என ஜன.21 ல் உத்தரவிட்டனர். அரசு புறம்போக்கு வண்டிப்பாதை நிலத்தை தேர்வு செய்துள்ளனர். அங்கு நுாலகம் அமைத்தால் எதிர்காலத்தில் ரோடு அமைக்கும்போது கட்டடத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். அரசு நிதி விரயமாகும். அது 4 கி.மீ.,துாரத்தில் உள்ளது. போக்குவரத்து வசதி இல்லை. 'கிராமசாவடி' என ஆவணத்தில் உள்ள இடத்தை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வசந்தகுமார் ஆஜரானார். நீதிபதிகள் கலெக்டர், மாவட்ட நுாலக அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவ.24 க்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ