அரசு மருத்துவக்கல்லுாரிகளில் ரேடியாலஜி பிரிவில் காலியிடம் அதிகரிப்பு
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைகளில் ரேடியாலஜி பிரிவில் பேராசிரியர்கள், டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.பொதுமக்கள் கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீர் பை, பித்தப்பை போன்ற உள்ளுறுப்பு பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை பெற அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்க வேண்டும்.இதுதவிர வயிற்று வலி, இதர வயிறு பிரச்னையால் பாதிக்கப்படுவோர், கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லுாரியில் ஸ்கேன் எடுக்கும் ரேடியாலஜி பிரிவில் கடந்த காலங்களில் பேராசிரியர் உட்பட 7 பேர் இருந்தனர். தற்போது பெரும்பாலான மருத்துவக் கல்லுாரியில் ரேடியாலஜி பிரிவில் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இணைப் பேராசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. மூன்று உதவி பேராசிரியர்கள் மட்டுமே ஸ்கேன் எடுக்கின்றனர். இவர்களும் ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்டவர்களுக்கு ஸ்கேன் எடுக்கின்றனர். மாவட்டத்தில் மற்ற அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுப்பதற்கு மிஷின் இருந்தும் டாக்டர்கள் பற்றக்குறையால் பெரும்பாலானோர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கே பரிந்துரைக்கப்படுகின்றனர்.நோயாளிகள் கூறுகையில், உள்நோயாளியாக தங்கினால் தான் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க முடியும். இல்லாவிட்டால் வெளியே தான் எடுக்க சொல்கின்றனர். வசதி இல்லாதவர்கள் சாதாரண வயிற்று வலியாக இருந்தாலும் அரசு மருத்துவக் கல்லுாரியில் ஒரு வாரம் காத்திருந்து தான் ஸ்கேன் எடுக்கின்றனர். டாக்டர் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக துவங்கிய பெரும்பாலான மருத்துவக் கல்லுாரியில் ரேடியாலஜி பிரிவில் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. உதவி பேராசிரியர்களை வைத்து தான் சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. சிவகங்கை போன்ற மருத்துவக் கல்லுாரியில் அவர்களும் தினசரி 60க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஸ்கேன் எடுக்கின்றனர். அரசு தான் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.