தேவகோட்டையில் பணம் இரட்டிப்பு மோசடி; 5 பேர் மீது வழக்கு
சிவகங்கை; தேவகோட்டையில் ரியல் எஸ்டேட் மூலம் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக ரூ.2.82 கோடி பெற்று மோசடி செய்த 5 பேர் மீது சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அழகாபுரிநகர் சரவணன் மகன் சந்தோஷ். அவரது தந்தை சரவணன், தாய் சாந்தி, சகோதரி சந்தியா, உறவினர் மேலகாவனம்பட்டி சசிக்குமார் ஆகிய 5 பேரும், ரியல் எஸ்டேட் தொழிலில் பணம் முதலீடு செய்தால், 2 ஆண்டில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக பலரிடம் உறுதி அளித்துள்ளனர். இதை நம்பி தேவகோட்டை கருதாவூரணியைச் சேர்ந்த கணேசன் மகன் அரவிந்த் 31, 2023 மற்றும் 2024ம் ஆண்டில் பல தவணைகளில் வங்கி மூலமும், நேரடியாகவும் ரூ.2.26 கோடி அளித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்த கருப்பையா மகன் முத்துலட்சுமணனிடமும் ரூ.55.96 லட்சம் வரை பெற்றுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி பலரிடமும் பணம் பெற்றுள்ளனர்.சிவகங்கை எஸ்.பி., ஆஷிஷ் ராவத்திடம் அரவிந்த் புகார் அளித்தார். அவரது உத்தரவுபடி சந்தோஷ், சரவணன், சாந்தி, சந்தியா, சசிக்குமார் ஆகிய 5 பேர் மீது சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி வழக்கு பதிந்துள்ளார்.