காரையில் திறக்கப்படாத புதிய ரேஷன் கடை
தேவகோட்டை: தேவகோட்டை ஒன்றியம் பெரியகாரையில் பழைய பள்ளி கட்டடத்தின் ஒரு பகுதியில் நுாலகமும், மற்றொரு பகுதியில் ரேஷன் கடையும் செயல்பட்டு வருகிறது. கோட்டூர், பெரிய காரை இரண்டு ரேஷன் கடைகளுக்கும் ஒரே பொறுப்பாளர் தான். பொறுப்பாளர் வரும் நேரத்தில் பொருட்கள் வாங்க மக்கள் வருவதால் நெருக்கடி உள்ளது. போதிய வசதி இல்லாத நிலையில் புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. பெரிய காரை பிரதான சாலையில் கடந்த ஆண்டு ரூ.9 லட்சத்தில் அனைத்து வசதிகளுடன் முழு நேர ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் புதிய ரேஷன் கடை திறக்கப்படாமல் உள்ளது. கடையில் வயரிங் செய்யப்பட்டும் மின் வாரியம் இது வரை இணைப்பு கொடுக்கவில்லை. புதிய கட்டடத்தை சுற்றிலும் செடிகள் வளர தொடங்கி விட்டன.