உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியகம்

கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியகம்

கீழடி:கீழடியில் ஏற்கனவே 7ம் கட்ட அகழாய்வு நடந்த இடம் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் மேலும் அகழாய்வு நடந்த நான்கரை ஏக்கர் நிலமும் அருங்காட்சியகமாக மாற்ற இன்று காலை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2015 முதல் அகழாய்வு நடந்து வருகின்றன. மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு பணிகளை தொடங்கிய போது பிரம்மாண்டமான கட்டடங்கள், உறைகிணறுகள், தந்தத்தால் செய்யப்பட்ட பகடைகள் உள்ளிட்டவைகளை கண்டறிந்தார்.சிந்து சமவெளி நாகரீகத்தில் மக்கள் கட்டியிருந்த கட்டுமானத்தை விட கீழடி கட்டுமானம் மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது. கட்டடங்களில் தண்ணீர் உள்ளே வரவும் வெளியே செல்லவும் அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். கீழடி அருங்காட்சியகத்தில் இதனுடைய மாதிரியையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.தமிழக தொல்லியல் துறை அகழாய்வு செய்த இடங்கள் மற்றும் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு செய்த இடங்கள் அனைத்தும் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து அதற்காக நில உரிமையாளர்கள் 17 பேரிடம் இருந்து நான்கரை ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தயதுடன் அதற்கான இழப்பீடும் வழங்கப்பட்டு திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்க கடந்தாண்டு நவம்பரில் தமிழக அரசு ஒப்பந்தம் கோரியது.15 கோடியே 69 லட்ச ரூபாய் செலவில் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இன்று ( ஜன 23) காலை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்த வெளி அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.ஏற்கனவே கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் ஆகிய இருவரும் ஸ்பெயினில் அகழாய்வு பணிகள் குறித்தும் அருங்காட்சியகம் குறித்தும் பயிற்சிக்கு சென்றிருந்தனர். எனவே திறந்த வெளி அருங்காட்சியகம் உலகளவில் பலரது கவனத்தை பெறும் வகையில் அமைக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ